Friday, 22 August 2014

Home made beauty tips Out of the parlor - பார்லர் போகாமலேயே பளிச்சிட வேண்டுமா?

சருமத்தில் ஏற்படும் கருமையை போக்க, பார்லியை தூளாக்கி, அத்துடன் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு, பால் ஆகியவற்றை கலக்க வேண்டும்.பின் அந்த கலவையை, வெயில் அதிகமாக படும் இடங்களான முகம், கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து, அவை காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சருமத்தில் ஏற்படும் கருமை மறைந்து போய்விடும்.

பியூட்டி பார்லருக்கு சென்று ப்ளீச், பேஷியல் போன்றவை செய்து கொண்டால் அதில் இருக்கும் ரசாயனங்களால், அந்த சமயத்துக்கு நல்லாயிருந்தாலும், நாள்பட முக அழகு கெட்டுவிடும் என்று எண்ணுபவரா நீங்கள்? உங்கள் வீட்டில் இருந்தபடி நீங்களே பேஸ் மாஸ்க் போட்டு உங்கள் முகத்தை பளபளப்பாக ஆக்கிக் கொள்ள முடியும். இதோ சில டிப்ஸ் உங்களுக்காக…

எண்ணெய் சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

மூன்று டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் தயிர், அரை தக்காளி, ஐந்து துளி ஆரஞ்சு எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்த பின் முகத்தை கழுவ, எண்ணெய் பசை நீங்கி, முகம் பளபளக்கும். இந்த மாஸ்க், சாதாரண மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு உகந்தது. இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், அவை காய்ந்து இறுகி வறண்ட தன்மையை கொடுக்கும். இந்த தன்மை சருமத்தில் காணப்படும், அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சுவதோடு, அழுக்கையும் அகற்றுகிறது.

வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

மென்மையான(சென்சிடிவ்) சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

நன்கு பழுத்த வாழைப்பழத்துடன், முட்டையின் மஞ்சள் கருவை கலந்து, இரண்டு டீஸ்பூன் சன்பிளவர் ஆயில், ஐந்து துளி ரோஸ் எசன்ஷியல் ஆயில் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த வகை பேஸ் மாஸ்க் வறண்ட மற்றும் மென்மையான சருமத்திற்கு ஏற்றது.

ஒளிரும் சருமம் வேண்டுமா…

50 கிராம் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், பப்பாளி, தக்காளி ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். அதோடு இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் மூன்று துளி எலுமிச்சை எசன்ஷியல் ஆயில் சேர்த்து, முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென ஒளிரும். ஒளிரும் சருமத்திற்கான இந்த மாஸ்க் பயன்படுத்திய பின் தோல் ஈரப்பதத்துடன், மென்மையாகவும், இளமையாகவும் காணப்படும். இவ்வகை மாஸ்க் அடிக்கடி முகத்தில் பூசினால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...