Friday, 22 August 2014

Hair loss problems? - முடி கொட்டும் பிரச்னையா?

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது. ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது. என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள் இதோ சில டிப்ஸ்…

* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.

* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.

* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.

* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.

* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.

* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.

* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.

* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.

* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...